ஆந்திராவில் தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோரி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஆந்திராவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்டவற்றை தமிழகத்துடன் இணைக்கக் கோரி தமிழர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர், நகரி, விஜயபுரம் உள்ளிட்ட பல பகுதிகள், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழகத்தின் சற்றொப்ப 32,000 சதுர மீட்டர் நிலப்பரப்பிலான பகுதிகள், ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன.
தற்போது, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுகின்ற சூழலில், சித்தூர், நகரி, விஜயபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஆந்திர மாநிலப் பகுதிகளிலுள்ள 169 கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள், தாய்த்தமிழகத்துடன் தம்மை இணைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
65 கிராமப் பஞ்சாயத்துகள் தமிழகத்துடன் தங்கள் பகுதிகளை இணைக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 11 ஞாயிறு காலை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில், தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையிலான த.தே.பொ.க. தோழர்களும், பல்வேறு அரசியல் கட்சி, இயக்கத் தலைவர்களும், பிரதிநிதிகளும் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வில், சென்னை வாழ் தமிழுணர்வாளர்களும், தமிழக மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.