உணவு பாதுகாப்பு மசோதா.. கருணாநிதி பதிலளிக்க ஜெ. எழுப்பியிருக்கும் 7 கேள்விகள்!
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்ற பழமொழிக்கேற்ப பல பிரச்னைகளில் தி.மு.க. எடுத்த முடிவுகளை மனதில் வைத்துத்தான், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.
இதற்குப் பதிலளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "நான் எப்போது, எந்தத் தேதியில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா தேதியைக் குறிப்பிட்டோ அல்லது ஏடுகளைக் குறிப்பிட்டோ சொல்ல முடியுமா?" என்று வினவியிருக்கிறார். ஆனால், அதே அறிக்கையில், "உணவுப் பாதுகாப்பு மசோதாவில் நான் துரோகம் செய்துவிட்டேன் என்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா காட்டியுள்ள ஒரே ஆதாரம், கழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் இந்த மசோதாவை ஆதரித்துக் கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன" என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பதாக நான் சொல்லவில்லை என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.