கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் ஜெயலலிதா
சென்னை: கொடநாட்டில் இருந்து இன்று பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சென்னை வந்தடைந்தார்.
முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் சில வாரங்கள் தங்கியிருந்து அரசுப் பணிகளை கவனிப்பார், என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.
அதன்படி, முதல்வர் ஜெயலலிதா ஜூன் 28-ந்தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. அவ்வப்போது அரசு தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தி, முக்கிய பிரச்சினைகளில் முடிவு மேற்கொண்டார்.
44 நாட்களுக்கு பிறகு கொடநாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா இன்று ஜெயலலிதா சென்னை திரும்பினார். கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்த முதல்வர், பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.