இந்தப் பக்கம் பாக்.சுட்டாலும்... அந்தப் பக்கம் வெங்காயத்திற்காக கையேந்தத் தயாராகும் மத்திய அரசு!
டெல்லி: பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாக்கும் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெங்காயம் விலை நாடு முழுவதும் மகா வேகத்தில் உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வெங்காய விலையைத் தணிக்க பெருமளவில் வெளியிலிருந்து வெங்காயம் வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானிடம் கையேந்தப் போகிறதாம்.
பெரிய வெங்காயம்
பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கிலோ ரூ. 100
கடந்த சில மாதங்கள் வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிறிசு ரூ. 60
சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலை பெரிய வெங்காயத்தை வாங்கி மக்கள் சமாளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களில் வெங்காயம் விலை பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 90 ரூபாயை எட்டியுள்ளது.
விவாதிக்க வேண்டும்
வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர்.
டீசல் விலை உயர்வே காரணம்
பெட்ரோல், டீசல் ஆகியவை கடந்த சில மாதங்களில் 27 முறை உயர்த்தப்பட்டதும் வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாக். ஈரான் வெங்காயம்
இந்நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விலை குறையுமா...
மேலும், ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச விலை கிலோ ஒன்றிற்கு 40 ரூபாய் என அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், வெங்காய ஏற்றுமதி அளவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நடவடிக்கைகள் மூலம் சந்தைகளுக்கு வெங்காய வரத்து அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாக விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.