தூத்துக்குடியி்ல்... 67வது சுதந்திர தினம்.. கோலாகல கொண்டாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 67வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 67வது ஆண்டு சுதந்திர தினவிழா மாவட்ட கலெக்டர் அலுவலக பெருத்திட்ட வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் ரவிக்குமார் வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த 55 பயனாளிகளுக்கு ரூ.5லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரானர் துறைமுகத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. துறைமுக மைதானத்தில் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் மேயர் சசிகலாபுஷ்பா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்து பகுதிகளில் நாட்டின் 67வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.