ஆடிட்டர் ரமேஷ் கொலை: கோவையில் துப்பாக்கி, தோட்டாக்கள் - ஒருவர் கைது
கோவை: சேலம் பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோவை, உக்கடம் பகுதியில் உள்ள முகமது அன்சார் என்பவரின் வீட்டு சாக்கடையில் இருந்து துப்பாக்கி மற்றும் 53 புல்லட்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணையின் போது, நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இருந்து 17 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி என்பவரது கைத்துப்பாக்கி, கோவையை சேர்ந்த முகமது அன்சார் என்பவரிடம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கோவை, உக்கடம் அல் அமீன் காலனியில் உள்ள முகமது அன்சாரின் வீட்டில் செவ்வாய்கிழமையன்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் துப்பாக்கி எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் முகமது அன்சாரின் மனைவி யாசிதாவிடம் விசாரணை மேற்கொண்டபோது துப்பாக்கியை அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இரண்டு தினங்களாக துப்பாக்கியை சாக்கடையில் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கைத்துப்பாக்கி மற்றும் 53 தோட்டாக்கள் கிடைத்தது. இதனையடுத்து முகமது அன்சாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கிச்சான் புகாரியின் நண்பர் சுலைமான் என்பவர் மூலம் துப்பாக்கி தன்னிடம் வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகமது அன்சாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.