நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 5 உடல்கள் மீட்பு: மீதமுள்ள 13 பேரின் கதி தெரியவில்லை
மும்பை: வெடிவிபத்து ஏற்பட்ட ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் சிந்துரக்ஷக்கில் கடந்த புதன்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 15 மாலுமிகள், 3 அதிகாரிகள் காணாமல் போனதாக கப்பற்படை அறிவித்தது.
இந்நிலையில் கப்பலில் இருந்து இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த 5 பேரும் மாலுமிகள். காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மாலுமிகளில் 8 பேர் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீட்கப்பட்டுள்ள 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சர் ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
இதற்கிடையே மீதமுள்ள 13 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.