டோல்கேட் ஊழியர்களை தாக்கிய பா.ம.க. நிர்வாகிக்கு குண்டாஸ்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் டோல்கேட் ஊழியர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ம.க நிர்வாகி ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சேலம் சென்றுவிட்டு வந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் உளுந்தூர்பேட்டையில் உள்ள டோல்கேட்டினை கடக்க முயன்ற போது ஊழியர்களுக்கும், பா.ம.க. நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பாமகவினர் டோல்கேட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, அங்கிருந்த ஊழியர்களை தாக்கினர்.
இது தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி உள்பட ஏராளமானவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அன்புமணி ராமதாஸ் முன்பு ஜாமீன் பெற்றுள்ள நிலையில் வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்டம், மருதூரை சேர்ந்த ராஜா உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, ராஜா மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் சம்பத், ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி அளித்தார். இதையடுத்து, ராஜாவை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.