தூத்துக்குடி: வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது
தூத்துக்குடி: கடல்தாது மணல் கொள்ளை தொடர்பான அரசின் ஆய்வு வெறும் கண்துடைப்பாக இல்லாமல் தவறு செய்தவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தூத்துக்குடியில் இன்று வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற தமிழர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதுடன், ஜனநாயகத்திற்கு விரோதமாக கொடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இலங்கை ராணுவத்தினை கண்டிக்காத மத்திய அரசு மீனவர்கள் தங்ளைத்தானே பாதுகாத்துக்கொள்ள அவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும். மேலும் தமிழக மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவை மீட்கவேண்டும்.
எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்ட டாக் தொழிற்சாலை கடந்த 6மாத காலமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் இதனை நம்பி வாழ்ந்துவரும் மறைமுக தொழிலாளர்கள் என 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்தவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளது. ஆய்வுக்குழு கொடுக்கும் அறிக்கையினை பெற்று அரசு சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவர்கள் முறைகேடாக சம்பாதித்த அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும். இந்த ஆய்வு வெறும் கண்துடைப்பாக இல்லாமல் தவறு செய்தவர்களுக்கு பாடமாகவும், படிப்பினையாகவும் இருக்கவேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து வேல்முருகன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 200க்கும் மேற்ப்பட்டவர்களை டி.எஸ்.பி., பெஸ்கி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications