செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!
சென்னை: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இங்குள்ளோர் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருப்பினும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றாமல் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே தங்களை திறந்த வெளிமுகாமுக்கு மாற்றக் கோரி பலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காகவே 3 ஈழத் தமிழரை நாடு கடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர் இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்பது போராட்டக்காரர்களின் கருத்து.