மகப்பேறு உதவித்தொகையில் ரூ.1 கோடி மோசடி: சேலத்தில் தணிக்கைக்குழு விசாரணை
சேலம்: மகப்பேறு உதவித்தொகை வழங்குவதில் 1 கோடி ருபாய் மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து சேலம் மாவட்டத்தில் சிறப்பு தணிக்கைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் காரிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 24 துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்களின் பெயர்கள் அரசு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உதவித்தொகை வழங்கப்படவில்லை என பயனாளிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதல் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது இணையதளம் வாயிலாக மோசடி நடந்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், அதிகாரிகள் மீதான புகார்களுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, வட்டார மருத்துவ அலுவலர் அர்த்தநாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.