செவ்வாயில் குடியேற விரும்பும் 1,800 இந்தியர்கள்: பெங்களூர்வாசிகள்தான் அதிகம்
டெல்லி: பூமியில் அதுவும் இந்தியாவில் வாழ்ந்து போரடித்துப் போய் செவ்வாய் கிரகத்தில் குடியேற முன்பதிவு செய்துள்ளனர் 1800 இந்தியர்கள்.
இந்தியாவிலேயே பெங்களூர்வாசிகள்தான் சிகப்பு கிரகத்தில் அதாவது செவ்வாயில் குடியேற அதிக ஆர்வம் காட்டுகின்றனராம்.
நெதர்லாந்து நாட்டில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
7 டாலர் கட்டணம்
2022ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.
18 வயதிற்கு மேற்பட்டோர்
மனநிலை தெளிவாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
30000 பேர் பதிவு
இவ்வாறு இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதில்30,000 பேர் அமெரிக்காவில் இருந்து பதிவு செய்துள்ளனர்.
1800 இந்தியர்கள்
இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 1,800ஆக உள்ளது. கடந்த மே 6ஆம் தேதி பதிவு செய்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாக இருந்தது. இப்போது 1800 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பெங்களூருவாசிகள் அதிகம்
இதில் பெரும்பான்மையானோர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்று இந்நிறுவனத்தின் தகவல் அதிகாரி ஆஷிமா டோக்ரா தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம் தங்களின் விண்வெளிப் பயணம் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டிருப்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்வாகும் நபர்கள்
2014ம் ஆண்டு இறுதியில் 20 முதல் 40 பேர் வரை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுவார். 8 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு இறுதியாக தேர்வு செய்யும் நபர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இஸ்ரோவின் பயணம்
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம், 2013ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் செவ்வாய்க் கிரக விண்வெளிப் பயணத்தை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.