நண்பேண்டா.... பூனைக்கு ‘ரத்த தானம்’ செய்த ‘லாப்ரடார்’ மேக்கி
வெலிங்டன்: உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூனைக்கு நாயின் ரத்தத்தை செலுத்தி பூனையைக் காப்பாற்றியுள்ளார் நியூசிலாந்து டாக்டர் ஒருவர்.
வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் சில நேரங்களில் குடும்பத்தின் அங்கமாகவே மாறி விடுவது உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் அவைகளின் உயிருக்கு ஆபத்தென்றால் எந்தவொரு முடிவை எடுப்பதற்கும் அதன் உரிமையாளர்கள் தயங்குவதில்லை.
அதேபோல், தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகின்றன. அந்த வகையில் ஒரு பூனையின் உயிரைக் காப்பாற்ற அதன் உரிமையாளர் எடுத்த முயற்சியும், அதற்கு மருத்துவர்கள் செய்த அதிரடி மருத்துவமும் தற்போது புதியதோர் சாதனையாகியுள்ளது நியூசிலாந்தில்.
எலி விஷம்.....
நியூசிலாந்து, தவுரங்கா பகுதியை சேர்ந்த கிம் எட்வர்ட்ஸ் என்பவரது செல்லப் பூனை ரோரி. எதிர்பாராத விதமாக கடந்த வெள்ளியன்று, எலிகளுக்கு வைக்கப் பட்ட விஷத்தைச் சாப்பிட்டு விட்டது ரோரி.
மருத்துவர்கள் கைவிரித்தனர்....
விஷத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் துடித்த ரோரியை மருத்துவமனையில் அனுமதித்தார் கிம். விஷம் ரத்தத்தில் கலந்து விட்டதால் ரோரியைக் காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.
ப்ளீஸ், ரோரியைக் காப்பாற்றுங்கள்...
'எப்படியாவது ரோரியை காப்பாற்றுங்கள்' என்று கதறிய எட்வர்ட்சின் கெஞ்சலை புறக்கணிக்க முடியாத டாக்டர் கேட் ஹெல்லெர், உடனடியாக தனது தோழி மிச்சேல் விட்மோருக்கு போன் செய்தார்.
பிளட் ட்ரான்ஸ்ஃபியூசன்....
பிள்ட் ட்ரான்ஸ்ஃபியூசன் முறையில் ரோரியின் விஷம் கலந்த ரத்தத்தை வெளியேற்றிய கேட், அதே நேரத்தில் மிச்சேல் விட்மோரின் செல்ல நாயான லாப்ரடார் இன மேக்கியின் ரத்தத்தை ரோரியின் உடலில் செலுத்தினார்.
நாய்களுக்கும் இரத்த பிரிவுகள் உண்டு....
உயிரியல் கோட்பாடுகளின்படி, நாயும் பூனையும் வெவ்வேறு விலங்கின குடும்ப வகையை சேர்ந்தவை. அது மட்டுமின்றி, நாய் வகைகளில் கூட மனிதர்களுக்கு உள்ளது போல் ரத்த பிரிவுகள் (குரூப்கள்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய சாதனை...
ஆனாலும், ரோரியை எப்படியாவது காப்பாற்றிக் கொடுத்து விட வேண்டும் என்ற வேகத்தில் அரியதொரு புதிய முயற்சியாக நாயின் ரத்தத்தை பூனைக்கு ஏற்றிய டாக்டர் கேட் ஹெல்லர் தன்னை அறியாமலேயே புதியதோர் சாதனை செய்து விட்டார்.
இன்னும் பூனையா தான் இருக்கு....
மேக்கியின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்துள்ள ரோரி, தற்போது ஆரோக்கியமாக துள்ளி விளையாடுகிறதாம். நாயின் ரத்தம் உடலில் கலந்து விட்ட போதும், ரோரி நாய் போன்று குரைப்பதில்லை... படித்துக் கொண்டிருக்கும் பேப்பரை அது பறிப்பதுமில்லை' என சிரித்துக் கொண்டே கூறுகிறார் அதன் உரிமையாளரான எட்வர்ட்.