மும்பையில் பெண் போட்டோகிராபர் பலாத்காரம்- ஒருவன் கைது- 4 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!!
மும்பை: மும்பையில் இளம்பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் எஞ்சிய 4 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மும்பை போலீசார் அறிவித்துள்ளனர்
மும்பையில் பிரபல ஏடு ஒன்றின் பெண் போட்டோகிராபர் நேற்று மாலை 5 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதிக்கு நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கும்பல் ஒன்று பெண் போட்டோகிராபரின் நண்பரைத் தாக்கிவிட்டு அவரை பலாத்காரம் செய்துள்ளது. அப்போது அந்த பெண் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தவர் ஓடிவர மர்ம கும்பல் தப்பி ஓடியது.
இது தொடர்பாக என்.எம்.ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் போட்டோகிராபர் ஜஸ்லோக் ஹாஸ்பிடல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய பலாத்கார கும்பலை கைது செய்ய போலீசார் 12 தனிப்படைகளை அமைத்து இருந்தனர். தப்பி ஓடியவர்களில் இருவரது பெயரையும் கூட பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார். மேலும் சந்தேக நபர்கள் 5 பேரின் வரைபடமும் வெளியிடப்பட்டிருந்தது.
விடிய விடிய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தற்போது 5 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டனர்.
ஒருவன் கைது- எஞ்சியோர் அடையாளம் காணப்பட்டனர்
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவன் கைது செய்யபப்பட்டுவிட்டான். எஞ்சியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வழக்கி விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும். பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தது 20 ஆண்டுகால தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வோம்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அடையாளம் காணப்பட்ட நபர் பற்றிய விவரங்களை வெளியிட இயலாது என்றார்.