மெட்ராஸ் கபே திரைப்படத்தை புறக்கணித்த அனைவருக்கும் நன்றி… வைகோ
தமிழ் இனப்படுகொலை செய்த கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட "மெட்ராஸ் கபே" திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டுகோளை ஏற்று இன்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.
தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை திரையிட இயக்குனரும், தயாரிப்பாளரும் பலவகையில் முயற்சி செய்து இலாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறின.
அப்படிப்பட்ட நிலையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக சுயநலமின்றி போராடும் எங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து "மெட்ராஸ் கபே" திரைப்படத்தை திரையிடாமல் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையுலத்தினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.