நாகையில் கரை ஒதுங்கிய 'மண்ணெண்ணெய் பைபர் படகு'.. ஊடுருவியது தீவிரவாதிகளா?
தமிழகத்துக்கு இலங்கை வழியே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இலங்கையைச் சேர்ந்த 17 அடி நீளமுள்ள பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருக்கிறது.
இந்த படகை மீனவர்கள் பயன்படுத்தியதற்காக எந்த ஒரு தடயமும் அதில் இல்லையாம். மேலும் வழக்கத்துக்கு மாறாக மண்ணெண்ணெயால் அந்த பைபர் படகு இயக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை அந்த பைபர் படகு யாரால் கொண்டு வரப்பட்டது? அதில் வந்திறங்கியவர்கள் யார்? என்பது குறித்து எந்த ஒருதகவலும் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றனர் போலீசார்.
ஒருவேளை உளவுத் துறை எச்சரித்தது போல தீவிரவாதிகள் ஊடுருவினரா? அல்லது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதா? என்ற முடிவுக்கு வர முடியாமல் தொடர்ந்து மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாகப்பட்டினம் எஸ்.பி. சிபி சக்கவரத்தி, அந்தப் படகில் இருந்து டவல்கள், தீப்பெட்டிகள் கைப்பற்றியிருக்கிறோம். மீனவர்கள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி படகுகளை இயக்க மாட்டார்கள். இதனால் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.