நிரம்பியது வீராணம் ஏரி.. நாளை பாசனத்துக்கு திறப்பு!
கடலூர்: தமிழகத்தின் முக்கிய ஏரியான வீராணம் ஏரி ஞாயிற்றுக்கிழமை மாலை 46.50 அடியை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பாசனத்துக்காக நாளை ஏரி திறந்துவிடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடலூர், காட்டுமன்னார்குடி, சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. காவிரியில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் கடந்த மூன்று மாதங்களாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு போனது.
இதனால் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் நீர் திறக்கப்பட்டு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக வீராணத்துக்கு நீர் அனுப்பப்பட்டது. வறண்டு போய் இருந்த வீராணம் ஏரி நிரம்பியதால் மீண்டும் சென்னை குடிநீருக்கு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நீர் அனுப்பும் பணி தொடங்கியது.
தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 46.50 அடியை எட்டியது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடி. வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 77 கனஅடி அனுப்பப்படுகிறது.
ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 71 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.