கைதட்டல்கள் அதிகம் கிடைத்தால் அது சில நேரம் ஆபத்தாகிவிடும்: வைகோ
ஈரோடு: எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் என்ற தலைப்பில் ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் கூறியதாவது..

நான் கரிகால் சோழன் அல்ல...
என்னை அழைத்தபோது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். இளையன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர்களாம் இணையதள நண்பர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் மாற்றத்தை எவரும் எளிதில் நகைத்துவிட முடியாது.

மாற்றம்தான் மாற்று அரசியல்
மாற்றம்தான் மாற்று அரசியல். அனைத்துத் துறைகளிலும் மாற்றம் வளர வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நான் தூக்கி எறியப்பட்டபோது திராவிட இயக்கத்தில், அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே மறுமலர்ச்சி திமுக என இயக்கத்திற்கு பெயர் சூட்டினோம்.

மறுமலர்ச்சி எளிதில் கிடைக்காது
மறுமலர்ச்சி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் ஞானத்தை கற்றுத் தந்த அறிவாசான் பெரியார் பிறந்த மண்ணில் கருத்துக் களம் நடைபெறுகிறது. கைதட்டல்கள் எழவில்லை என்ன சகோதரி ரொஹையா பேசினார். பின்னர் செவிப்பறை கிழியும் வகையில் நீங்கள் கைதட்டினீர்கள். கைதட்டல்கள் அதிகம் கிடைத்தால் அது சில நேரம் ஆபத்தாகிவிடும்.

உலகை உலுக்கிய புரட்சிகள்
திருச்சியிலே நடந்த திமுக மாநில மாநாட்டில் உலகை உலுக்கிய புரட்சிகள் என்னும் தலைப்பில் நான் பேசிய பேச்சுக்கு எழுந்த கையொலிகள் ஏராளம். எமது கருத்துக்களை எடுத்துச் செல்ல இளம் தலைமுறையினர் வந்து விட்டீர்கள். ஆகவேதான் நானும், அவைத் தலைவரும் உங்களை பேசவைத்துவிட்டு கீழ் அமர்ந்து கேட்டோம்.

மதிமுகவின் கருத்து என்ன....
சரி மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடு என்ன? என்ற பெரும் கருத்து நிலவும் நேரத்தில் இந்தக் கருத்துக் களம் நடந்து கொண்டிருக்கிறது. மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நீங்கள் மிகவும் நேர்த்தியாக உரையாற்றி இருக்கிறீர்கள். மறுமலர்ச்சி திமுகவிற்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது உடனடியாக இந்திய அரசியலில் மாற்றம் உருவாக வேண்டும்.

தூக்கி எறியப்பட வேண்டும் காங்கிரஸ்
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும். கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. திருச்சியிலே நடந்த மதிமுக முதல் மாநில மாநாட்டிலே தமிழீழம்தான் நமது இலக்கு என்று தீர்மானம் போட்டவர்கள் என்றார் வைகோ.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷமூர்த்தி,குகன் மில் செந்தில், R.T.மாரியப்பன், N. செல்வராகவன், T.C.C சேரன், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கொள்கை விளக்கு அணி செயலாளர் அழகுசுந்தரம், மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், மாநில மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன்,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் செந்தில் அதிபன், திருச்சி டாக்டர் ரொக்கையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications