மும்பை பெண் பத்திரிக்கையாளர் கற்பழிப்பு: முக்கிய ஆதாரமான செல்போன் எங்கே...?
மும்பை: நாட்டையே அதிர வைத்த பெண் பத்திரிக்கையாளர் கற்பழிப்பு வழக்கில், முக்கிய ஆதாரமான கற்பழிப்பு பதிவு செய்யப்பட்ட செல்போனை குற்றவாளிகள் விற்று விட்டதாகத் தெரிய வந்துள்ளது. அதனைத் தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் செய்தி சேகரிக்கச் சென்ற மும்பை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பாலியல் பலாத்காரத்தை குற்றவாளிகள் செல்போனில் படம் பிடித்ததாக பாதிக்கப் பட்ட பெண் போலீசில் தெரிவித்திருந்தார்.
மேலும், பலாத்காரம் பற்றி வெளியில் கூறினால் அந்த செல்போன் காட்சிகளை வெளியிடுவோம் என குற்றவாளிகள் எச்சரித்ததாகவும் அப்பெண் கூறியிருந்தார். இந்நிலையில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட செல்போன் மட்டும் மாயமாகியுள்ளது.
5வது குற்றவாளி கைது....
குற்றவாளிகள் ஒவ்வொருவரையாக கைது செய்து வந்த மும்பை போலீசார் நேற்று முன்தினம் 5வது குற்றவாளியான சலீம் அன்சாரியைக் கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், பலாத்காரத்தை செல்போனில் பதிவு செய்ததை அவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
பணப்பற்றாக்குறை....
ஆனால், பலாத்காரத்திற்குப் பின் டெல்லிக்குத் தப்பிச் சென்ற போது, உண்டான பணத் தேவையின் காரணமாக அங்குள்ள சந்தையில் அந்த செல்போனை சலீம் விற்றுவிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரச்சினை பெரிதாகலாம்...
செல்போனை வாங்கிச் சென்றவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. ஒருவேளை செல்போனை வாங்கிய நபர் அப்படங்களை வெளியிட்டு விட்டால், பிரச்சினை இன்னும் தீவிரமாகி விடும் அபாயம் உள்ளதாக போலீசார் அஞ்சுகின்றனர்.
அஷோக் விஷார் பகுதியில்...
எனவே, நாடு முழுவதும் அந்த செல்போனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரால் சலீம் அன்சாரி அஷோக் விஹார் பகுதியில் வைத்து வளைத்துப் பிடித்ததால், அப்பகுதியில் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர் போலீசார்.
தனிப்படை....
அத்தோடு, செல்போனில் பதிவாகியுள்ள காட்சிகளே குற்றவாளிகளுக்கு எதிரான முக்கிய சாட்சி. எனவே, அந்தச் செல்போனை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.