காங்கிரஸின் தேர்தல் ஆயுதம்.. நிலம் கையகப்படுத்துதல் மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆயுதங்களில் ஒன்றான நிலம் கையகப்படுத்துதல் மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நிறைவேறியது.
நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான மசோதாவை மத்திய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தாக்கல் செய்தார்.

இடதுசாரிகள் எதிர்ப்பு முழக்க
பின்னர் இம்மசோதா மீது அவர் பேசத் தொடங்கிய போது இடதுசாரி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இந்திய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்கக் கோரி முழக்கமிட்டனர்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவின் அம்சங்கள் என்ன?
கூச்சல் குழப்பத்துக்கு இடையே பேசிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடும், வளர்ச்சி திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும் அளிப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையை போல் 4 மடங்கு இழப்பீடும், நகர்ப்புற நிலங்களுக்கு சந்தை மதிப்பை போல் 2 மடங்கு இழப்பீடும் வழங்கப்படும் என்றார்.

நில உரிமையாளர்கள் ஒப்புதல்
மேலும், தனியார் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 80% நில உரிமையாளர்களின் ஒப்புதல் அவசியம். பொது-தனியார் கூட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த 70% நில உரிமையாளர்களின் ஒப்புதல் அவசியம் என்றும் இம்மசோதா வலியுறுத்துகிறது என்றார்.

பயன்தரா நிலங்களை எடுக்கலாம்- முலாயம்
இம்மசோதா மீது பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய விவசாயிகளிடம் நிலம் மட்டுமே உள்ளது. வேறு எதுவும் இல்லை. செழிப்பான நிலத்தை விட்டுவிட்டு பயன்தராத நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்றார்.

விளைநிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு
இதேபோல் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், விளைநிலத்தை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் புன்செய் நிலத்தை மட்டுமே அரசு கையகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு போதுமான இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

216 வாக்குகள் ஆதரவு
விவாதத்துக்கு பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 216 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் கிடைத்தன. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தன.

வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு
வாக்கெடுப்பின் போது, அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தன.

வெளிநடப்பு ஏன்? - அதிமுக
"அ.தி.மு.க. கொண்டு வந்த திருத்தத்தை ஏற்காததால், வெளிநடப்பு செய்ததாக" அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications