கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்த்துக்கு அதிகாரம் - தேமுதிக அறிவிப்பு
சென்னை: தேமுதிகவின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. இதில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சித் தலைவர் விஜயகாந்த் தீர்மானிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக விஜயகாந்த்துக்கு அதிகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல மத்தியஅரசைக் கண்டித்து 4 தீர்மானங்களும், தமிழக அரசைக் கண்டித்து 3 தீர்மானங்கள் என மொத்தமாக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரலாறு காணாத குழப்பம்
கட்சி தொடங்கியது முதல் ஒரே ஸ்பீடில், படு நிலையாக போய்க் கொண்டிருந்த தேமுதிக தற்போது வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது.
எம்.எல்.ஏக்கள்- தலைவர்கள் விலகல்
29 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த தேமுதிகவிலிருந்து 7 பேர் விலகி விட்டனர். மூத்த தலைவர் ஆஸ்டின்கட்சியை விட்டுப் போய் விட்டார்.
தள்ளாட்டம்- தடுமாற்றம்
இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது கட்சி தள்ளாட்டத்திலும், தடுமாற்றத்திலும் இருந்து வருகிறது.
கூட்டணிக் குழப்பம்
மக்களுடனும், தெய்வத்துடனும் இருந்து வந்த கூட்டணியை கடந்த சட்டசபைத் தேர்தலுடன் முறித்துக் கொண்ட விஜயகாந்த், அதிமுகவுடன் முதல் முறையாக கூட்டணி வைத்து கட்சிக்கு பலத்தைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அந்தக் கூட்டணி அதோ கதியாகி விட்டது.
அடுத்து யாருடன்...
இனி வரும் காலத்தில் தனியாக போட்டியிட்டால் தாறுமாறாக கட்சி சிதறிப் போய் விடும் என்பதால், வருகிற லோக்சபா தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது தேமுதிக.
காங்கிரஸா.. பாஜகவா...
எனவே வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் தேமுதிக என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திமுகவிலிருந்தும் கூப்புடுறாக..
அதேசமயம் திமுக தரப்பிலிருந்தும் தேமுதிகவுக்கு மறைமுகமாக அழைப்புகள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
7 அதிருப்தியாளர்கள் நீக்கம்...
இன்றைய கூட்டத்தில், அதிமுகவுக்கு ஆதரவாக மாறியுள்ள 7 தேமுதிக எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கும் முடிவு குறித்தும்விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
கூட்டணி குறித்து விஜயகாந்த்திடம் முடிவு
இன்றைய கூட்டத்தில் கூட்டணி தொடர்பான எந்தவிதமான முடிவுகளையும் தலைவர் விஜயகாந்ததே எடுப்பார். அதற்கான முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடியில் 9வது மாநில மாநாடு
தூத்துக்குடியில் 9வது மாநில மாநாட்டை செப்டம்பர் 22ம் தேதி நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசைக் கண்டித்து 3 தீர்மானம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது, தேமுதிக தலைவர் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். கடந்த ஆட்சியின் போது வகுக்கப்பட்ட மின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என தமிழக அரசை கண்டித்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசைக் கண்டித்து 4 தீர்மானங்கள்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கவலை அளிக்கிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு உத்தரவாத மசோதா குறித்து மத்திய அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் மத்திய அரசு வஞ்சகம் செய்து விட்டது என மத்திய அரசை கண்டித்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.