கல்பனா சாவ்லா விருதுப் பணத்தில் சக ஊழியர்களுக்கும் பங்கு கொடுத்த பெண் தாசில்தார்
நாகர்கோவில்: கல்பனா சாவ்லா வீர விருதுப் பணத்திலிருந்து தனது சக ஊழியர்கள் இருவருக்கு தலா ரூ. 1 லட்சத்தை பிரித்துக் கொடுத்துள்ளார் பெண் தாசில்தார் சுகி பிரமிளா.
ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து கல்பனா சாவ்லா விருதினைப் பெற்றார் சுகி பிரமிளா என்பது நினைவிருக்கலாம்.
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திய கும்பலை உயிரைப் பணயம் வைத்துப் பிடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு தாசில்தார்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாசில்தாராக இருந்தவர் சுகி பிரமிளா. இவர் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் செய்யப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்தார்.
உயிரைப் பணயம் வைத்து
தனது சக அதிகாரி ஜோதிஷ் குமார் மற்றும் டிரைவர் ஜான் பிரைட்டுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை மறித்துத் தடுத்து கடத்தலைத் தடுத்து நிறுத்தினார். கொலை மிரட்டல் உள்ளிட்டவை குறித்து சட்டை செய்யாமல் துணிச்சலுடன் இதை செய்தார் சுகி பிரமிளா.
சக ஊழியர்களுக்கும் பங்கு
இந்த தீரச் செயலுக்காக அவருக்கு கல்பனா சாவ்லா வீர விருது அளிக்கப்பட்டது. பரிசாக ரூ. 5 லட்சம், பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்வர் ஜெயலலிதா அளித்தார். அந்தப் பரிசுப் பணத்தை தற்போது தனது சக ஊழியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துள்ளார் சுகி.
ஆளுக்கு 1 லட்சம்
வருவாய் ஆய்வாளர் ஜோதிஷ் குமாருக்கும், டிரைவர் ஜான் பிரைட்டுக்கும் தலா ரூ. 1 லட்சத்தைக் கொடுத்துள்ளார் சுகி. இதற்கான காசோலைகளை இருவரிடமும் அவர் வழங்கினார்.
டீம் ஒர்க்
எனது சக ஊழியர்களுக்கும் இந்த தீரச் செயலில் பங்குண்டு. இது ஒரு டீம் ஒர்க். எனவேதான் அவர்களுக்கும் இந்தப் பணத்தைக் கொடுத்தேன்.
துணிச்சலுடன் செயல்படுவேன்
எனக்கு எப்போதெல்லாம் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத காரியங்கள் குறித்துத் தகவல்கள் கிடைக்கிறதோ உடனடியாக எனது கீழ் அதிகாரிகளை உஷார்படுத்தி விரையச் சொல்வேன். அத்தோடு நானும் சம்பவ இடத்திற்குப் போய் விடுவேன். இந்த விஷயத்தில் நான் அச்சப்படுவதில்லை. துணிச்சலுடன் செயல்படுகிறேன் என்றார் சுகி.
அப்பா வி.ஏ.ஓ
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கரண் விளை கிராமம்தான் சுகியின் சொந்த ஊராகும். இவரது தந்தை கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர். அவரது மறைவுக்குப் பின்னர் அனுதாப அடிப்படையில் இவர் இளநிலைப் பணியாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து தாசில்தார் ஆகியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் 3வது வீரப் பெண்
குமரி மாவட்டத்திலிருந்து கல்பனா சாவ்லா விருது பெற்ற 3வது பெண் சுகி. இதற்கு முன்பு அமலா என்ற பெண், தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலைப் பார்த்து தனது சேலையைக் கழற்றி ரயிலை நிறுத்து பெரும் விபத்தை தவிர்த்து அந்த விருதைப் பெற்றார். அதேபோல முன்னாள் கலெக்டர் ஜோதி நிர்மலாவும் சட்டவிரோத சம்பவங்களை ஒடுக்கி கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார்.