மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(95) நுரையீரல் கோளாறு காரணமாக ப்ரிடோரியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை 18ம் தேதி அவர் தனது 95வது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடினார்.
அவரது உடல் நிலை தேறுவதும், மோசமாவதுமாக உள்ளது. இந்நிலையில் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மண்டேலாவின் உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது, சில சமயம் மேலும் மோசமாகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூட்டனில் உள்ள அவரது வீடு அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.