வேண்டாம் சிரியா போர்.. செப். 7ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் அழைப்பு
வாடிகன் சிட்டி: சிரியப் போரினைத் தவிர்க்க போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் அறைகூவல் விடுத்துள்ளார். அமைதிக்காக செப்டம்பர் 7ம் தேதி உண்ணாவிரதம் இருக்கவும், சிரியாவில் அமைதி திரும்ப பிரார்த்திக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவர் கூறுகையில், செப்டம்பர் 7ம் தேதி புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை உண்ணாவிரதம் நடைபெறும். அனைவரும் ஒருங்கிணைவோம். கடவுள் கொடுத்த அமைதி என்ற மாபெரும் பொக்கிஷம் சிதைந்து போகாமலும், சிரிய மக்கள் அன்புடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என்று வேண்டியும், உலகம் முழுவதும் மீண்டும் போர் வெடிக்காமலும், வன்முறை ஒழியவும் வேண்டி இந்த உண்ணாவிரதம் மற்றும் அமைதிப் பிரார்த்தனை நடைபெறும்.
இந்த அமைதி வழி உண்ணாவிரதத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அலலாதவர்களும் பங்கு பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்குப் பொருத்தமான முறையில், வழியில் அதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மீண்டும் போர்நமக்கு வேண்டாம். நமக்குத் தேவை அமைதியான உலகம்தான். ஆண்களும், பெண்களும் அமைதியுடன் வாழ வேண்டும் என்றார் போப்பாண்டவர்.












Click it and Unblock the Notifications