உள் மாவட்டங்களில் மழை பெய்யும்னு சொன்னாக... சென்னையில் வெயில் மண்டையைப் பொளக்குது!
சென்னை: தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தலைநகர் சென்னையில் வெயில் மண்டையைப் பிளக்கிறது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
குமரிக்கடல் பகுதிக்கு மேல் இருந்த மேல் அடுக்கு சுழற்சி மறைந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மாலை நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றார்.
காலையிலிருந்தே சென்னையில் நல்ல வெயில் அடித்து வருகிறது. இன்று மட்டுமல்ல கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்குகிறது. இருப்பினும் மாலையில் பெய்யலாம் என்று வானிலை மையம் கணித்திருப்பதால் பொறுத்துப் பார்ப்போம்...