மும்பை நிருபர் பலாத்காரம்: மருத்துவச்செலவாக ரூ 1.85 லட்சம் வழங்கியது மகாராஷ்டிர அரசு
மும்பை: மும்பையில், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பத்திரிக்கையாளரின் மருத்துவச் செலவிற்காக ரூ 1.85 லட்சம் வழங்கியுள்ளது அம்மாநில அரசு.
கடந்த மாதம் 22ம் தேதி, மும்பை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், தனது சக ஆண் ஊழியருடன் சக்தி மில்லைப் புகைப்படம் எடுப்பதற்காகச் சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது, அவர் பூரண குணமடைந்துள்ள நிலையில் அவரது மருத்துவச்செலவு முழுவதையும் மகாராஷ்டிர அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவிற்கான தொகை முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஜஸ்லோக் மருத்துவமனைக்கு 1.85 லட்ச ரூபாயை அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் பிருதிவிராஜ் சவானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, ‘ஏற்கெனவே முதல்வர் அறிவித்திருந்தபடி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்து செலவுக்காக 1,85,859 ரூபாயை ஜஸ்லோக் மருத்துவமனைக்கு அளித்துள்ளோம். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications