ஆப்பக்கடை அன்னக்கிளி.. 'அம்மா' கடை இட்லி ரெடி...!
சென்னை: அம்மா உணவகம் மக்கள் மத்தியி்ல் செம பிரபலம் என்பது பழைய செய்தி.. ஆனால் அந்த உணவகத்திலேயே மக்களால் விரும்பி வாங்கி சாப்பிடப்படுவது இட்லிதானாம்.
அம்மா உணவகங்களில் விற்பனையாகும் உணவுப் பொருட்களிலேயே இட்லிதான் படு வேகமாக விற்பனையாகிறதாம்.
மக்களுக்கு அம்மா உணவகத்தின் இட்லி மீது தனிப் பிரியமே வந்து விட்டதாம்.
4.6 கோடி இட்லி விற்பனை
சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதுவரை இங்கு 4.6 கோடி இட்லி விற்பனையாகியுள்ளதாம்.
இட்லி கிளாஸ்தான்.. ஆனால் மாநகராட்சிக்கு லாஸ்தான்..
இட்லி என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் குறைந்த விலைக்குத் தரப்படுவதால் மாநகராட்சிக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறதாம்.
இட்லி ஒரு ரூபாய்.. நஷ்டம் 86 பைசா
இங்கு ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் நஷ்டம் ஒரு இட்லிக்கு 86 பைசா என்கிறார்கள்.
மொத்த நஷ்டம் ரூ. 39 லட்சம்
இதுவரை விற்றுள்ள 4.6 கோடி இட்லிகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் கிடைத்துள்ள நஷ்டம் ரூ. 39 லட்சமாம்.
நம்பர் டூ சாம்பார் சாதம்
இட்லிக்கு அடுத்து மக்கள் மனம் கவர்ந்த உணவாக சாம்பார் சாதம் உள்ளது. இதுவரை 85 லட்சம் தட்டு விற்பனையாகியுள்ளதாம். அடுத்த இடத்தில் தயிர்ச் சாதம், கரிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், பொங்கல் ஆகியவை உள்ளனவாம்.
தினசரி 3 லட்சம் இட்லி
200 வார்டுகளிலும் அம்மா உணவங்களில் ஒரு நாளைக்கு 3 லட்சம் இட்லி விற்பனையாகிறதாம்.
சாம்பார் சாதம் 60,000 தட்டு
அதேபோல சாம்பார் சாதம் 60,000 தட்டு தயாரித்து விற்கிறார்களாம். பொங்கல் 30,000 தட்டு விற்பனையாகிறது.
ரொட்டியும் வருதுங்கோ...
அடுத்து விரைவில் ரொட்டி, பருப்பும் இரவு நேரத்தில் விற்பனையாகவுள்ளதாம். இதற்காக ரொட்டி தயாரிக்கும் மெஷின்களை வாங்க ஆர்டர் தரப்பட்டுள்ளதாம். இது வந்தவுடன் அனைத்து அம்மா உணவகங்களும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ரொட்டி, தால் விற்பனைக்காக திறந்திருக்குமாம்.
மக்களுக்கு குஷிதான்.. மாநகராட்சிக்குத்தான் கஷ்டம்
இந்த உணவகங்களால் மக்கள் குஷியாக இருந்தாலும் அத்தனை உணவகங்களையும் பராமரிப்பது, விலைக் குறைவால் ஏற்படும் இழப்பை சமாளிப்பது போன்றவை மாநகராட்சிக்கு பெரும் சிரமத்தைத்தான் கொடுத்துள்ளதாம்.
2400 பெண்கள்
அம்மா உணவகங்களில் கிட்டத்தட்ட 2400 பெண் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களே சமைத்து, பரிமாறி, நிர்வகிக்கிறார்கள்.