மின்வெட்டில் நாட்டிலேயே முதலாவதாக வந்து புதிய சாதனை படைத்த ஜெ ஆட்சி!- கருணாநிதி
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: இந்த ஆண்டிலும் மின்வெட்டு தமிழகத்திலே அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறதே?
பதில்: இந்த ஆண்டில் தமிழகத்தில் 34 சதவிகித அளவுக்கு மின்சாரம் பற்றாக் குறை யாக இருக்கிறது என்று மத்திய மின்சார ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலை, மத்திய மின்சார ஆணையம் வெளி யிட்டிருப்பதில், ஐந்து மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டில், தமிழ்நாட்டில் 34.1 சதவிகிதமும், பீகாரில் 29 சதவிகிதமும், கர்நாடகாவில் 27.4 சதவிகிதமும், பஞ்சாப்பில் 29.5 சதவிகிதமும், கேரளாவில் 24.6 சதவிகிதமும் மின் பற்றாக் குறை உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அதாவது நாட்டிலேயே மிக அதிக அளவிற்கு தமிழகத்திலே மின்சாரப் பற்றாக்குறை இருக் கிறதாம்! அ.தி.மு.க. ஆட்சியில் சாதனையே இல்லை என்கிறார்களே, இது சாதனை இல்லையா?
பால் கொள்முதல் விலை
கேள்வி: கொள்முதல் விலையை உயர்த்த, பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகச் செய்தி வந்துள்ளதே?
பதில்: பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தால், அந்தத் துறையின் அமைச்சர் பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிட வேண்டும். அதிலே முடிவு ஏற்படாவிட்டால் முதலமைச்சரே அவர்களை அழைத்துப் பேசிட வேண்டும். கழக ஆட்சிக் காலத்தில் எத்தனை முறை பால் உற்பத்தி யாளர்கள் சங்கத் தலைவர்களையும், பிரதிநிதி களையும் நான் அழைத்துப் பேசியிருக்கிறேன் என்பதை அவர்களைக் கேட்டாலே தெரிந்து கொள்ளலாம்.
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், பால் உற்பத்தியாளர் களின் கோரிக்கையினை ஏற்று 7-3-2007 அன்று, 10 ரூபாய் 50 காசுகள் என இருந்த பசும்பால் கொள்முதல் விலையினை 1 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி, 12 ரூபாய் என்று கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதற்கு அடுத்த ஆண்டே, 10-3-2008இல் அந்தக் கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் உயர்த்தப் பட்டது. மீண்டும் 1-9-2009 அன்று 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. 5-1-2011 அன்று மீண்டும் 1 ரூபாய் 10 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதுபோலவே 7-3-2007 அன்று எருமைப் பாலுக்கு 1 ரூபாய் 50 காசுகளும் - 10-3-2008அன்று 4 ரூபாயும் - 1-9-2009 அன்று 5 ரூபாயும் - 5-1-2011 அன்று 2 ரூபாய் 20 காசுகளும் உயர்த்தப்பட்டது.
ஐந்தாண்டு கால தி.மு.கழக ஆட்சியில் பாலின் கொள்முதல் விலை நான்கு முறை உயர்த்தப் பட்டது. மொத்தம் 6 ரூபாய் 60 காசுகள் லிட்டர் ஒன்றுக்கு பசும்பால் விலை கழக ஆட்சியிலே உயர்த்தப்பட்டது. எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் 70 காசுகள் கூடுதலாகக் கழக ஆட்சியிலே உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் 11 ஆயிரம் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன. அதிலே 4.25 இலட்சம் உறுப்பினர்கள் இருக் கிறார்கள். அவர்களின் நலன் கருதியும், கழக ஆட்சியிலே ஐந்தாண்டு காலத்தில் நான்கு முறை பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை நினைவிலே கொண்டும், கொள்முதல் விலையை உயர்த்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை உடனடியாகத் தமிழக அரசு அழைத்துப் பேசி, கொள்முதல் விலையை உயர்த்திட முன்வர வேண்டும்.
-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.