உ.பியில் கலவரம் - 12 பேர் பலி; காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஊரடங்கு!
முசாபர் நகர்/காஷ்மீர்: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரத்திற்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
முசாபர் நகர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வகுப்புக் கலவரமாக மாறியுள்ளது. இதுவரை 12 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து மீரட்டிலிருந்து 1000 ராணுவ வீரர்கள் முசாபர்நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 38 கம்பெனி புற ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்கு நிலைமை பதட்டமாக உள்ளதாகவும், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவைத் தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கவல் என்ற இடத்தில்தான் பிரச்சினை முதலில் வெடித்தது. அங்குள்ள நக்லபதோத் என்ற இடத்தில் நடந்த பஞ்சாயத்துக் கூட்டத்திற்குப் போய் விட்டுத் திரும்பியவர்கள், இன்னொரு தரப்பினருடன் மோதலில் இறங்கியதால் வன்முறை வெடித்தது.
காஷ்மீரில் 4 பேர் பலி - 2 மாவட்டங்களில் ஊரடங்கு
இதற்கிடையே தெற்கு காஷ்மீரில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சோபியான், குல்காம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சோபியான், ஜைனா போரா, குல்காம் ஆகிய பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இரு மாவட்டங்களிலும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சோபியானில் உள்ள சிஆர்பிஎப் மீது சிலர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் நான்கு பேர் பலியானார்கள். இதனால்அங்கு வன்முறை வெடித்தது.
உயிரிழந்த நான்கு பேரில் 2 பேர் பொதுமக்கள். இன்னொருவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று பாதுகாப்பு்ப் படையினர் கூறுகிறார்கள்.