விநாயகர் சதுர்த்தி - தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதால் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளுக்குப் பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம். சென்நையில் 1705 இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வருகிற 15-ந்தேதியன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்கிறார். மற்ற இந்து அமைப்புகள் சார்பில் 4 நாட்கள் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
சென்னையில் பெரிய சிலைகள் நிறுவப்படும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை முதல் அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்படும் வரை சுமார் 1 வார காலத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்பவர்கள் தங்களுக்குள் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி போலீசுடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் விழா கமிட்டியை சேர்ந்த இருவர் சிலை அமைத்துள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எளிதில் தீப்பிடிக்கக் கூடிய ஓலை கொட்டகைகள் போன்றவற்றை அமைக்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அனு மிக்கப்பட்ட சாலை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்து செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைபூஜை மற்றும் சிலைக் கரைப்பு பேரணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.