"நான் உதயநிதி பிஏ.. என்னை ஒன்னும் செய்ய முடியாது".. பெண்ணை மிரட்டும் "போலி நபர்" ஆடியோ
திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தான் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என கூறும் ஆடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (32) எம்.எஸ்.டபிள்யூ பட்டப் படிப்பை முடித்த இளம்பெண் சென்னையில் வேலைத் தேடி சென்றுள்ளார்.
அப்போது தோழியின் மூலமாக அறிமுகமான சென்னை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் "உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு பெரிய பெரிய இடத்தில் எல்லாம் தொடர்பு உள்ளது" என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு பணம் கொடுத்தால் நிச்சயம் வாங்கித் தருவதாக கூறியதாக தெரிகிறது.
அடடே.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி எழுதிய பரபர கடிதம்
4.50 லட்சம் ரூபாய்
வேலை வேண்டுமானால் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும் கடந்த 2018-ஆம் ஆண்டு சுமார் 4.50 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். வேலை இப்போது வரும், அப்போது வரும் என்று ராஜேஷ் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 பேரை வேலைக்கு சேர்த்துவிட்டால் உனக்கு வேலையும் கிடைக்கும் அதற்கான கமிஷனும் கிடைக்கும் என அந்த பெண்ணிடம் மூளைச் சலவை செய்துள்ளார்.
ராஜேஷ்
இவரது பேச்சை நம்பி தேன்மொழியும் பலரிடம் அரசு வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார். இவ்வாறு பெற்ற பணத்தை கொண்டு ராஜேஷ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அரசு வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் தேன்மொழியை தினந்தோறும் தொல்லை செய்து உள்ளனர்.
தற்கொலை முடிவுக்கு சென்ற தேன்மொழி
இதனால் தேன்மொழி ராஜேஷிடம் வேலை குறித்து கேட்டுள்ளார். எப்போது கேட்டாலும், இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என்று கூறி ராஜேஷ் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் தற்கொலை முடிவுக்கு சென்ற தேன்மொழியை மீட்டு அவரது உறவினர்கள், ராஜேஷ் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தேன் மொழி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை
தேன்மொழி அளித்த புகாரை சம்பந்தபட்ட கந்திலி காவல் நிலையத்திற்கு அனுப்பி உள்ளனர். அப்போது விசாரணைக்காக ராஜேஷை அழைத்த ஒரு காவலர் அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்து அவருக்கு ராஜேஷ் பணத்தை கொடுத்து சரி கட்டியுள்ளார். இதனால் தேன்மொழி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
செல்போனில் மிரட்டல்
போலீஸாரை கைக்குள் போட்டுக் கொண்ட ராஜேஷ், தேன்மொழியை செல்போனில் தாறுமாறாக மிரட்டியுள்ளார். இதே போன்று வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்திலும் ராஜேஷிடம் பல பேர் பல லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் என்ன செய்வது என அறியாமல் தவித்து வருகின்றனர்.
பெண்ணை மிரட்டும் வீடியோ
இந்த மோசடி ஆசாமியை காவல் துறையினர் பிடித்து உரிய முறையில் விசாரணை செய்து பாதிக்க பட்ட நபர்களுக்கு பணம் பெற்று தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தேன்மொழியை ராஜேஷ் மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் ராஜேஷ், "நான் உன்னிடம் வெளிப்படையாக நடந்துக் கொண்டும் என் மீது புகார் கொடுத்துள்ளாய். இனி மேல் எனது ஆட்டத்தை நான் கட்சி மூலமாக ஆரம்பிக்கிறேன்.
நான் உதயநிதியின் பிஏ
நான் உதயநிதி ஸ்டாலினின் பி.ஏ.. திங்கள்கிழமை ஆட்களை கூட்டிட்டு வா, நான் அத்தனை பேரையும் வெட்டுகிறேனோ குத்துகிறேனோ நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எங்க போனாலும் உனக்குதான் ஆபத்து என அந்த பெண்ணை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது.