கல்குவாரியில் வேலை செய்த 2 ஊழியர்களை கடத்தி தாக்கு: அதிமுக மாநில நிர்வாகி கைது
தனது குவாரியில் வேலை செய்த இளைஞர்களை பொருள் காணாமல் போனதாக வீடு புகுந்து கடத்திச்சென்று தாக்குதல் நடத்தியதாக அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகனை பென்னகரம் போலீஸார் கைது செய்துள்ளனர். மாநில நிர்வாகி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மாநில நிர்வாகி
அதிமுக விவசாய அணி மாநில தலைவராக பதவி வகிப்பவர் டி.ஆர்.அன்பழகன். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஜெ.பேரவை நிர்வாகியாக செல்வாக்கு மிக்கவராக இருந்தவர். சொந்தமாக கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. இதுதவிர அதிமுகவின் மாநில விவசாய அணி தலைவர் பதவியும் வகித்து வருகிறார். இதற்கு முன் ஊராட்சி குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
பென்னாகரம் தொகுதியில் போட்டியிட முயற்சி
இது தவிர மாவட்ட ஆவின் பால்வள கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பென்னகரம் தொகுதி சட்டப்பேரவைக்கு போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் அந்தத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை. தர்மபுரியில் அதிமுகவில் செல்வாக்குள்ளவராக உள்ளார்.
கல்குவாரியில் வேலை செய்யும் இளைஞர்கள்
பென்னாகரம் அருகே தாளப்பள்ளத்தில் டி.ஆர்.அன்பழகனுக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. அவரது கல்குவாரியில் வேலை செய்யும் ஜல்மாரன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ஆகிய 2 இளைஞர்கள் வேலை செய்கின்றனர். கல்குவாரியில் சில பொருட்கள் காணாமல் போனதாக சந்தேகத்தின் பேரில் தனது ஆதரவாளர்கள் மகேந்திரன், முருகன் இருவருடன் சுரேஷ் மற்றும் முத்துவேல் இருவர் வீட்டுக்கு சென்று அவர்களை தனது வாகனத்தில் கடத்திச் சென்று கல்குவாரியில் வைத்து தாக்கியதாக தெரிகிறது.

தப்பிச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்த இளைஞர்கள்
கல்குவாரியில் வைத்து அவர்களை கடுமையாக தாக்கியதாகவும் காயமடைந்த அவர்கள் தப்பிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று ஊரில் சென்று நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து ஊர்மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டு பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணை கைது
இதுகுறித்து புகாரைப் பதிவு செய்த போலீஸார் டி.ஆர்.அன்பழகனை அழைத்து விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என்பதால் டி.ஆர்.அன்பழகனையும் அவரது ஆதரவாளர்கள் மகேந்திரன், முருகன் உள்ளிட்டோரையும் கைது செய்தனர். கடத்தல் மற்றும் தாக்கி காயம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக தெரிகிறது. இதனிடையே தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறியதால் அன்பழகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications