அதிமுக உட்கட்சி தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி எதிர்த்து வழக்கு: மதியம் விசாரணை
அதிமுக உட்கட்சித்தேர்தல் டிச.7 அன்று நடக்க உள்ள நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
1.5 கோடி வாக்காளர் பட்டியல் எங்கே?- அதிமுக உட்கட்சி தேர்தல் முரண்பாடு- பட்டியலிடும் கே.சி.பழனிசாமி
ஜெயலலிதா மறைவும் அதிமுகவில் மாற்றங்களும்
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். பொதுக்குழு கூடி அவரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக தேர்வு செய்தனர். அவர் சிறைச் சென்றப்பின் அவரை கட்சியிலிருந்தும், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் அமர்ந்தனர்.
பொதுக்குழுவுக்கு அதிகாரம் கட்சி விதி திருத்தம்
பொதுக்குழு கட்சித்தலைமையை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது என விதி திருத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் டிச. 1 அன்று கூடிய செயற்குழுவில் கட்சி தலைமையை தொண்டர்களே நேர்டையாக தேர்வு செய்வர் என விதி மீண்டும் திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. அவர்கள் தேர்வை பொதுக்குழு கேள்வி எழுப்ப முடியாது என விதிகளை திருத்தினர்.
உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
இந்நிலையில் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி நேற்று ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தேர்தல் அவசர அவசரமாக விதிகளை பின்பற்றாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நோட்டீஸ் பீரியட் இல்லை, வாக்காளர் பட்டியல் இல்லை எனத்தெரிவித்திருந்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு
இந்நிலையில் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து அதிமுக முன்னாள எம்.பி கே.சி.பழனிசாமி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது முறையீட்டை ஏற்று மதியம் வழக்கை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக உறுப்பினராக இருந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, " கடந்த டிசம்பர்1 ஆம் தேதி நடந்த அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் இனி தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனுவில் என்ன முறையீடு?
இது ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் நடத்தும் முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர்.
மேலும் கட்சியின் உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது. கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களில் உட்கட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை.
ஓய்வு நீதிபதியை நியமித்து தேர்தல்
எனவே அதிமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமித்து, தேர்தல் நடத்தும் 21 நாட்கள் முன் முறையான அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவசர வழக்கு மதியம் விசாரணை
இந்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க கோரி கே.சி பழனிச்சாமி தரப்பில் இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி அப்துல் குத்தூஸ் அவர்கள் இந்த வழக்கை இன்று மதியம் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.