தலைமைச் செயலகத்தில் குவியும் கோப்புகள்.. விஜய் அரசில் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு எப்போது?
சென்னை: பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு அரசு பதவியேற்றால், கையோடு அமைச்சர்களும் பதவியேற்பார்கள்.. அவர்களுக்கு துறையும் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்று 7 நாட்கள் ஆகிறது. இதுவரை அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களின் கோப்புகள் அமைச்சர்களின் கையெழுத்திட்டாக வேண்டும். தலைமை செயலகத்தில் பல கோப்புகள் காத்திருக்கின்றன. கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் வருவதால் துறை ஒதுக்கீடு தாமதம் ஆகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந் தேதி வெளியானது. ஆனால் இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கக்கூடிய போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி ஆட்சிக்கான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் ஆதரவை காட்டி, த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். கூட்டணி கட்சி தலைவர்கள் உடனே முடிவுகளை அறிவிக்காததால், பதவி ஏற்பதற்கே 10-ந் தேதிவரை ஆகிவிட்டது. அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்று 7 நாட்கள் ஆனபோதும் அவர்களுக்கு இலாகாக்கள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளது.

துறைகள் ஒதுக்கீடு என்பது இப்போது வரை நடைபெறாமல் இருந்தாலும், முதல்வர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்திற்கு வந்து பணிகளை செய்கிறார். மாலை வரை தலைமைச்செயலகத்தில் இருந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு அரசு ஊழியர் போல் பணிகளை மேற்கொள்கிறார். அப்போது அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் பற்றி ஆய்வு செய்தும் வருகிறார்.
முக்கிய தொழிலதிபர்கள், பலதரப்பட்ட பிரமுகர்களை தினமும் முதல்வர் விஜய் தலைமை செயலகத்தில் சந்தித்து வருகிறார். வீட்டில் இருந்து வரும் மதிய உணவை தனது அலுவலகத்தின் உள்அறையில் வைத்து விஜய் சாப்பிடுவதாக புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய் தனது அமைச்சரவையில் 9 பேரை நியமித்தாலும், இலாகாக்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளில் இருந்தும் அமைச்சர்கள் நியமிக்கப்பட இருப்பதால் இதில் காலதாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவு வந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருந்தாலும், இதுவரை முழுமையான அரசு அமைவதில் உள்ள தாமதம் இருந்தது.
ஆனாலும் முக்கிய மக்கள் நலத் திட்டங்களான உயர் கல்வி உதவித் தொகை, மகளிர் உரிமைத்தொகை ஆகியவற்றை வழங்குவதில் அரசு சுணக்கம் காட்டவில்லை. ஆனால் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது அதற்கு அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்ற காரணம் என்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் செய்யப்பட்டு வந்த சாலைகள் அமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதில் சிக்கல் இருக்கிறது. பொதுவாக இந்தப் பணிகளுக்காக டெண்டர் விட்டு, நிதி மற்றும் நிர்வாக அனுமதியை பெற வேண்டும். அதற்கு துறை அமைச்சர்களின் ஒப்புதல் அவசியம் ஆகும். அதேபோல் அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில்தான் எடுக்கப்படும். அதன் பின்னர் அதற்கான திட்டங்கள் தீட்டப்படும். ஆனால் அமைச்சர்கள் முழு அளவில் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதாலும் துறைகள் ஒதுக்கப்படவில்லை . இதனால் பல கோப்புகள், அமைச்சரின் கையெழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் சொல்கிறார்கள். இன்னும் 4 நாட்களுக்குள் அமைச்சரவை முழுமையாக அமைக்கப்படலாம் என்கிறார்கள்.














Click it and Unblock the Notifications