பீகார், ஜார்க்கண்ட் போல ஆந்திரா சட்டசபையிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தீர்மானம்
அமராவதி: பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைப் போல ஆந்திரா சட்டசபையிலும் மத்திய அரசு பிற்படுத்தப்பட வகுப்பினர் குறித்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் வருகின்றன போது அனைத்து தரப்பும் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இது தொடர்பான வழக்குகளிலும் கூட 2011-ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையானதாக இல்லை என்கிறது மத்திய அரசு.
இதனால் புதியதாக ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது சமூகநீதி ஆதரவாளர்களின், பல மாநிலங்களின் கோரிக்கை. இதே கோரிக்கையை வலியுறுத்தி பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களின் கோரிக்கை
தமிழகம், உ.பி., மகாராஷ்டிராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டும் வருகிறது. ஆனாலும் இத்தகைய ஜாதிவாரி கணக்கெடுப்பில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன; ஒவ்வொரு ஜாதிகளிலும் உட்பிரிவுகள் இருப்பதால் மிக குழப்பமானதாகவும் நடைமுறையில் கடினமானதாகவும் இருக்கிறது என்கிறது மத்திய அரசு.

ஆந்திரா தீர்மானம்
இந்த நிலையில் ஆந்திரா சட்டசபையிலும் மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் செல்லுபோய ஶ்ரீனிவாச வேணுகோபால கிருஷ்ணா சட்டசபையில் இது தொடர்பான தீர்மானத்தை அறிமுகம் செய்தார். ஏற்கனவே கடந்த அக்டோபர் 28-ல் ஆந்திரா அமைச்சரவை இந்த தீர்மானம் கொண்டுவர ஒப்புதல் தெரிவித்திருந்தது.

ஏன் ஜெகன் மோகன் ரெட்டி
இத்தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கல்வி, பொருளாதாரம், சமூகநிலைகளில் ஜாதிகளின் பயன்பாடு குறித்த தெளிவு கிடைக்க வேண்டியது உள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் வெளிநடப்பு செய்தது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு
நாட்டில் 1931-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடுதலைக்குப் பின் அத்தகைய விரிவான ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் கூட 1931-ம் ஆண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் அமல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications