எலிபேஸ்ட்.. தடையை மீறி விற்றால் கடும் நடவடிக்கை..அரியலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
அரியலூர்: எலி மருந்து மற்றும் தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய தடை விதித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டு உள்ளார். எலிபேஸ்ட், மோனோகுரோட்டோபாஸ், புரோபனாஸ், அசிபேட், புரோப்பனபாஸ் + சைபர்மெத்திரின், குளோர்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 30 சதவீத மக்கள் நச்சு மருந்து அருந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதில் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், ஆசிய நாடுகளில் வசிக்கும் மக்களே விஷம் குடித்து சாகின்றனர். ஏனெனில் விஷமருந்துகள் எளிதாக கிடைக்கிறது. மளிகை கடைகளில் இத்தகைய மருந்துகள் தாராளமாக கிடைக்கிறது. இதில் மிக முக்கியமானது எலி மருந்துதான். பேஸ்ட் வடிவிலும், கேக் வடிவிலும் விற்கப்படுவதால், தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களின் முதல் தேர்வு எலிமருந்தாக இருக்கும். பெட்டிக்கடைகளுக்கு சென்று வாங்கி வந்துவிடலாம்.
அமெரிக்காவில் 1947ம் ஆண்டு முதல் எலிகளை கொல்வதற்காக ஜிங் பாஸ்பைடு என்ற வேதிப் பொருள் எலி மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் உலகம் முழுவதும் 80 வகையாக எலி மருந்துகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதனை எலிகள், அணில், பெருச்சாளி ஆகியவற்றுக்கு பிடித்த பட்டர் மற்றும் உணவு பொருட்களில் கலந்து வைக்கலாம். வீட்டின் உள்ளே திண்ணும் எலி வெளியே சென்று நிச்சயம் சாகும், 100 சதவீதம் எலிகளின் இறப்புக்கு உத்தரவாதம். அதே நேரத்தில் மனிதர்களும் இதில் இருந்து தப்புவதில்லை.
மாத்திரை வடிவில் சாக்லேட், கேக், பேஸ்ட் வடிவில் எலிமருந்து விற்பது மிகவும் தவறானது. உளவியல் ரீதியாக மக்கள் தினமும் பயன்படுத்தும் பேஸ்ட், கேக் வடிவில் விஷ மருந்துகளை உற்பத்தி செய்வது, பயன்படுத்துவதால் தவறுதலாக குழந்தைகள் சாப்பிட்டு உயிரிழந்து விடுகின்றனர்.
எலிகளும் பாலூட்டி வகையை சார்ந்தது, அதனை கொல்வதற்காக பயன்படுத்தப்படும் ஜிங் பாஸ்பைடு மருந்தும், அதே மாதிரியான விளைவுகளையும், உயிர் சேதத்தையும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும், சமீபகாலமாக அரசு பொது மருத்துவமனையில் எலிபேஸ்ட் அல்லது மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எலி மருந்து சாப்பிட்டால், சிறுநீரக செயலிழப்பு, மிக தீவிரமான மஞ்சள் காமாலை ஏற்படும். தொடர்ந்து உடலில் பல உறுப்புகளின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும். குறிப்பாக நமது உடலில் மிகப்பெரிய தொழிற்சாலையாக இயங்கும் கல்லீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், நிலைமையை சிக்கலாக்கி விடும். இதன்காரணமாக ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போகும். மூளை, நுரையீரலில் ரத்தம் கசியும். இதனை தொடந்து உறங்கிய நிலையிலே கோமாவுக்கு சென்றுவிடுவார். எல்லா விஷ மருந்துகளும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த மருந்தினை விற்பனை செய்யவோ இருப்பு வைக்கவோ தடை விதித்து தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது.
தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு எலி மருந்து மற்றும் ஆறு பூச்சிக்கொல்லிகளை அபாயகரமானதாக அறிவித்து, 60 நாட்களுக்கு விற்பனை தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு தடை செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளின் விவரங்கள் - 1. மோனோகுரோட்டோபாஸ், 2.புரோபனாஸ், 3.அசிபேட், 4. புரோப்பனபாஸ் + சைபர்மெத்திரின், 5. குளோர்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளுக்கு உடனடியாக விற்பனை தடை விதிக்கப்படுகிறது. மேலும், ரோட்டால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற எலி மருந்தான 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பசை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் 6 தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்வது மற்றும் ரேட்டால் என்ற எலி மருந்தை பெட்டி கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், பூச்சிக்கொல்லி சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் 1971-ன்படி பூச்சிக்கொல்லி உரிமம் ரத்து உள்ளிட்ட மிக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.