அரியலூரில் கொரோனா பாதிப்பு மிக மிக மோசம்.. வெறும் 10 நாட்களில் 218% அதிகரித்த ஆக்டிவ் கேஸ்கள்
அரியலூர்: தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் கடந்த 10 நாட்களில் 218% அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த சில தினங்களாக 33 ஆயிரத்திலேயே இருந்த தினசரி கொரோனா பாதிப்பு. நேற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் அதில் 12 வயதுக்குட்பட்ட 1307 பேர் உட்பட மொத்தம் 34875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து டிராக்டர் விஜயானந்த் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 218% அதிகரித்துள்ளது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 1624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 259 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல அரியலூரில் நேற்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் 1511 பேர் உட்பட 1624 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் வரை தலைநகர் சென்னையில் தான் கொரோனா பரவல் உச்சத்திலிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களாகச் சென்னையில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும், அதே நிலையில், மாநிலத்தில் பிற மாவட்டங்களில் வைரஸ் பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications