கொரோனா பிடியில் பெங்களூரு.. ஒரே மாதத்தில் 1,000 பேர் உயிரிழப்பு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!
பெங்களூரு: பெங்களூவில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 1,000 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக மிக பயங்கரமாக உள்ளது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத எந்த மாநிலமும் இல்லை என்றும் கூறும் அளவுக்கு அனைத்து மாநிலங்களிலும் தொற்று தீயாக பரவி வருகிறது.

கர்நாடகா நிலைமை மோசம்
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பாடாய்படுத்தி வருகிறது. இங்கு தினமும் 25,000-த்தை தொட்டு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. ''நிலைமை எங்களின் கையை மீறி சென்று விட்டது'' என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

பெங்களூருவில் ஆதிக்கம்
கர்நாடக மாநிலத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஐ.டி.கம்பெனிகள் அதிகம் நிறைந்த பெங்களுருவில் மட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தினமும் 16,000 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர பெங்களுருவில் உயிரிழப்புகளும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 1,000 பேர் பலியாகியுள்ளனர்.

1,000 பேர் உயிரிழப்பு
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஒரு மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 971 பேர் உயிரிழந்ததே இதற்கு முன்பு அதிகபட்ச உயிரிழப்பாக இருந்தது. பெங்களூரில் கடந்த சனிக்கிழமை அன்று 149 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு ஒரு நாள் முன்னதாக 124 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இரவு நேர ஊரடங்கு
இந்த மாதத்தில் இதுவரை 1,093 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளதாக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார் இறுதி நாள்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications