பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியா?.. மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்.. புள்ளி விவரங்களுடன் ராகுல் அட்டாக்!
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வேலை வாய்ப்பு இன்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து இருப்பது ஏன்? என்றும் பரோட்டாவிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி ஏன்? என்றும் இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. இங்கு மக்களை சந்தித்த ராகுல் காந்தி அடுத்ததாக கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டார்.
ஒற்றுமை யாத்திரை..குழந்தைகளுடன் ராகுல் செல்பி! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார் -காங்கிரஸ் விளக்கம்
கர்நாடகாவில் ராகுல் காந்தி
தொடர்ந்து கேரளாவிலும் நடைபயணத்தை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ராகுல் காந்தியின் கர்நாடக நடைபயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ராகுல் காந்தி கர்நாடகாவில் நடைபயணத்தை தொடங்கிய நாள் முதல் போஸ்டர் சர்ச்சையில் தொடங்கி பல்வேறு விவகாரத்தில் பாஜக காங்கிரஸ் இடையே வார்த்தை போர் தொடங்கியுள்ளது.
மழை, வெயில் பொருட்படுத்தாமல்
மழை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ராகுல் காந்தி நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாகவும், இதனால் இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என இப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே கட்சியினருடன் ராகுல் காந்தி உரையாடி வருகிறார். அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வரும் ராகுல் காந்தியில் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்.
அடுக்கடுக்கான கேள்வி
இந்த நிலையில் 37-வது நாளாக ராகுல் காந்தி இன்று தனது நடைபயணத்தை தொடங்கினார். கர்நாடகாவில் 13-வது நாளாக இன்று ராகுல் காந்தி பாத யாத்திரை இன்று தொடங்கினார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பரோட்டாவிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி ஏன்?
ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாக இருப்பது ஏன்? வேலை வாய்ப்பு இன்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்து இருப்பது ஏன்? பரோட்டாவிற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி ஏன்? விவசாய தேவைக்கு பயன்படும் டிராக்டர்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி ஏன்? இதுபோன்ற கேள்விகளை பாரத் ஜோடோ யாத்திரை தொடர்ந்து எழுப்பும். பிரதமர் மோடி நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.