கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்.. ஒரே நர்சிங் கல்லூரியில் 29 பேருக்கு கொரோனா.. பொதுமக்கள் அச்சம்!
பெங்களூரு: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள நர்சிங் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் 29 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. மிகக் குறுகிய காலத்தில் கண்டறியப்பட்ட வேக்சின் பணிகளே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா உலக நாடுகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை அலறவிடும் ஓமிக்ரான்.. பிரிட்டன் நாட்டில் மட்டும் 160 பேருக்கு பாதிப்பு.. அடுத்து என்ன?
ஓமிக்ரான் கொரோனா
இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இருப்பினும், இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் முதலில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய 2 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அதேபோல குஜராத். மகாராஷ்டிரா, டெல்லியிலும் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.
29 பேருக்கு கொரோனா
இதனால் பல்வேறு மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் ஏற்கனவே 2 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதால், அங்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கர்நாடக மாநிலத்தில் நர்சிங் கல்லூரி ஒன்றில் பயிலும் 29 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
விடுதிக்குச் சீல்
கர்நாடகாவின் ஷிவமோகாவில் உள்ள நர்சிங் கல்லூரியில் தான் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வேக்சின் போட்டுக் கொண்டுள்ளனரே என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. அதேநேரம் அந்த 29 பேருக்கும் பெரியளவில் அறிகுறிகள் இல்லை என்றும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நர்சிங் கல்லூரி விடுதிக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஷிவமோகா துணை கமிஷனர் கே.பி.சிவக்குமார் தெரிவித்தார்.
விளக்கம்
மேலும், இதன் மூலம் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா பரவல் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய அப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கே.பி.சிவக்குமார் தெரிவித்தார். அவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுமா என்பது குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அவர் மறுத்துவிட்டார்.
கர்நாடக முதல்வர்
ஓமிக்ரான் அச்சம் காரணமாகக் கர்நாடகாவில் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியானால் அந்த இடம் கிளஸ்டர் பகுதியாக வகைப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் சனிக்கிழமையன்று 397 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 277 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், மேலும் 7,012 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.