ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. ஊளையிட்டு ஓடிய மக்கள்.. விரட்டி விரட்டி தாக்கிய சிறுத்தை..மைசூரில் ஷாக்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மைசூரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பாய்ந்து தாக்கியது. இதில் அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து காயமடைந்தார். இதுதவிர வனத்துறையினர் உள்பட பொதுமக்கள் பலரையும் சிறுத்தை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான ஷாக் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. குறிப்பாக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர் மாவட்டங்கள் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதனால் வனப்பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் அடிக்கடி யானைகள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
பாரிஸில் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய அஜய் கிருஷ்ணா... வேற லெவல் வளர்ச்சிதான்
மைசூருக்குள் நுழைந்த சிறுத்தை
இந்நிலையில் தான் மைசூர் நகருக்குள் இன்று சிறுத்தை ஒன்று நுழைந்து ஷாக் சம்பவம் நடந்துள்ளது. மைசூர் நகரில் உள்ள கிருஷ்ணராஜநகரில் (கேஆர்நகர்) உள்ள வீட்டு வசதி குடியிருப்புக்குள் இன்று காலை சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த மக்கள் பயத்தில் அலறினர். மேலும் வீட்டு கதவுகளை மூடிக்கொண்டனர்.
விரட்டி விரட்டி தாக்கிய சிறுத்தை
இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்த சம்பவம் காட்டுத்தீ போல் வேகமாக அந்த பகுதியில் பரவியது. இதனால் ஏராளமானவர்கள் வீட்டு மாடிகளில் நின்று கூச்சலிட்டனர். சிறுத்தையும் பல வீடுகளை தாண்டி வேகமாக ஓடியது. சாலையில் சென்றவர்கள் சிறுத்தையை பார்த்து ஓடினர். அவர்களை விரட்டி விரட்டி சிறுத்தை தாக்கியது.
மோட்டார் சைக்கிளில் பாய்ந்த சிறுத்தைத
மேலும் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்றார். இதனை பார்த்த சிறுத்தை வேகமாக ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் தாவி அவரை தாக்கியது. இதில் பதற்றமடைந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து இழுத்து செல்லப்பட்டார். இருப்பினும் ஆக்ரோஷம் அடங்காத சிறுத்தை சுற்றியும் பார்த்துவிட்டு அங்குள்ளவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மயக்கஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் துப்பாக்கியில் மயக்கஊசி வைத்து சிறுத்தையை தேடினர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு ஒருவழியாக சிறுத்தையின் உடலில் மயக்கஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து மயங்கிய சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு கூண்டில் அடைத்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
வெளியான வீடியோ
இருப்பினும் சிறுத்தை தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ஒரு வனத்துறை ஊழியர் என சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மைசூர் நகரில் உள்ள கிருஷ்ணராஜநகரில் சிறுத்தை நுழைந்து பொதுமக்களை தாக்கும் வீடியோவும், சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த வீடியோவும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ சிறுத்தை ஆக்ரோஷமாக பொதுமக்களை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.