கொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்'
பெங்களூர்: ஆப் கேர் (AAP Care) என்ற பெயரில், கர்நாடகாவில் கொரோனா தொடர்பான கள உதவிகளை மேற்கொள்கிறது ஆம் ஆத்மி கட்சி.
இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர், பிருத்வி ரெட்டி பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பரவலில், ஏப்ரல், மே மாதங்களில், நாட்டிலேயே, 11வது மாநிலமாக இருந்தது கர்நாடகா. தற்போது, 4வது இடத்தில் உள்ளது.

டெல்லி அருமை
டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகப்படியான பரிசோதனை, சிறப்பான சிகிச்சை போன்றவை வழங்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.

பாதுகாப்பு
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்குவதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளது. எனவேதான், மருத்துவர்கள், முன்கள சுகாதார ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவில்லை என்பதால், பணியில் சோர்வு அடைந்துள்ளனர். அதேநேரம், கொரோனா தொடர்பான உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ஆப் கேர்
இந்த சூழ்நிலையில் சமூக பொறுப்புடன் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கர்நாடகாவில் 'ஆப் கேர்' என்ற திட்டத்தை துவங்குகிறோம். தனிநபர் பாதுகாப்பு உபகரணம் அணிந்தபடி, ஆம் ஆத்மி தன்னார்வலர்கள், உதவி தேவைப்படுவோர் வீடுகளுக்குச் சென்று அவர்களின் உடல் வெப்பம், ஆக்சிஜன் அளவு போன்றவற்றை பரிசோதித்து உதவி செய்வார்கள். அவர்கள் வீடுகளில் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளின் தொடர்பு விவரங்களை நோயாளிகளுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அரசு தரும் புள்ளி விவரம் அடிப்படையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கே சென்று, ஆம் ஆத்மி இந்த உதவிகளை செய்கிறதாம். டெல்லியில் எவ்வாறு ஆக்ஸிமீட்டர்கள் வாங்கப்பட்டதோ, அதேபோல இங்கும் சுமார் 10,000 ஆக்ஸி மீட்டர் வாங்குகிறது ஆம் ஆத்மி.

குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்போர் அல்லது கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளோர், வீட்டு தனிமையில் இருந்தபடி, எத்தனை முறை தொலைபேசியில் அழைத்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆரம்பத்தில் சிறப்பாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்தது. இதை சமாளிக்க கர்நாடக அரசு திணறி வருகிறது. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி சார்பில் மக்களுக்கு உதவுவதற்காக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications