பாலியல் தொல்லை: போக்சோவில் கைதான கர்நாடக மடாதிபதி.. திடீர் நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அட்மிட்
பெங்களூரு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் மடாதிபதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு.
இவர் நடத்தி வரும் மடத்தின் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகள் சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகார் அளித்தனர்.

மாணவிகள் பாலியல் புகார்
கடந்த மாதம் 26-ஆம் தேதி இது தொடர்பாக மாணவிகள் இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தன் மீது கைது நடவடிக்கை பாயாமல் இருக்க சிவமூர்த்தி முருகா சரணரு சித்ரதுர்கா கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது.

நேற்று இரவு கைது
அப்போது மாணவிகள் சார்பில் ஆஜரான வக்கீல் சிவமூர்த்தி முருகா சரணரு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட கூடாது என்றும் வாதிடப்பட்டது. எனினும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை இன்று ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தர். இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சித்ரதுர்கா போலீசார், முருக மடத்திற்கு சென்று சிவமூர்த்தி முருகா சரணருவை சித்ரதுர்கா போலீசார் கைது செய்தனர்.

14 நாட்கள் நீதிமன்ற காவல்
கொட்டும் மழையிலும் போலீசார் அவரை காரில் ஏற்றி சென்றனர். திடீரென நேற்று இரவு போலீசார் அவரை கைது செய்த நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணமாக மடம் மற்றும் சித்ரதுர்கா நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவமூர்த்தி முருகா சரணருவை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதி
அப்போது நீதிமன்றம் சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், சிவமூர்த்தி முருகா சரணரு தனக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications