பாஜகவுடன் கூட்டணி வைத்த 'வினை'.. தேவகவுடா குடும்பத்திடம் இருந்து பறிபோகும் ஜேடிஎஸ் கட்சி, சின்னம்?
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதனையடுத்து ஜேடிஎஸ் கட்சி, அதன் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி நீதிமன்றத்தையும் அடுத்ததாக தேர்தல் ஆணையத்தையும் நாடுகிறது இப்ராகிம் தலைமையிலான கோஷ்டி. இதனால் தேவகவுடா குடும்பத்துக்கு ஜேடிஎஸ் கட்சி, சின்னம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது ஜேடிஎஸ். அக்கட்சியின் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடாக்கள், காங்கிரஸுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் மீது இருக்கும் கோபத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது ஜேடிஎஸ்.

அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை முன்னாள் பிரதமர் தேவகவுடா, மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா, பேரன் நிகில் குமாரசாமி என குடும்பம் சகிதமாக சந்தித்து பேசினர். லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதுஎன்பது தொடர்பாகவும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இன்னொரு பக்கம், பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்ததற்கு அக்கட்சியில் மிக கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜேடிஎஸ் கட்சியின் தலைவரான இப்ராகிம் தலைமையில் இந்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. பாஜகவுடனான கூட்டணியை ஏற்க முடியாது என இப்ராகிம் தலைமையிலான ஜேடிஎஸ் கோஷ்டி அறிவித்தது. இதனையடுத்து இப்ராகிமை ஜேடிஎஸ் தலைவர் பதவியில் இருந்து தேவகவுடா நீக்கினார். இதற்கு பதிலடியாக தேவகவுடாவை ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து இப்ராகிம் கோஷ்டி நீக்கியது.
இதனையடுத்து ஜேடிஎஸ் கட்சிக்கு உரிமை கோரி பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இப்ராகிம் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அத்துடன் ஜேடிஎஸ் கட்சியின் சின்னத்துக்கும் உரிமை கோரி தேர்தல் ஆணையத்துக்குப் போகிறது இப்ராகிம் கோஷ்டி.
ஜேடிஎஸ் கட்சி என்பது தேவகவுடாவின் குடும்ப கட்சிதான். மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் குடும்ப கட்சியாகவே இருந்தது. பால் தாக்கரேவுக்கு பின் அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா செயல்பட்டு வந்தது. பாஜகவுடன் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி இணைந்த நிலையில் கட்சியும் சின்னமும் யாருக்கும் என பிரச்சனை வந்தது. பால்தாக்கரே குடும்பத்திடம் இருந்து ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கே சிவசேனாவும் கட்சியும் போனது. தற்போது அதே போன்ற நிலைதான் தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications