கர்நாடகாவில் நுழைந்தது கேரளாவை உலுக்கிய ஜிகா வைரஸ்- பெங்களூரில் மட்டும் 6 பேருக்கு பாதிப்பு!
பெங்களூர்: கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஜிகா வைரஸ் பாதிப்பு கர்நாடகா மாநிலத்திலும் பரவத் தொடங்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மட்டும் 6 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸால் கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக கர்நாடகா மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் டெங்கு பாய்ச்சல் மிக அதிகமாக இருந்து வருகிறது. கர்நாடகா முழுவதும் 20,000-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 15 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் பெங்களூர் அருகே ஆனேக்கல் ஜிகினி என்ற பகுதியில் திடீரென பலருக்கும் காய்ச்சல் பரவியது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்குமோ என பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த 6 பேரின் உடல்நிலை மோசமானதால் அவர்களது ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பரிசோதனையில்தான் 6 பேருக்குமே ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜிகினி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எனவும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் மொத்தம் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை அதிகமாக பாதிக்கும். ஆகையால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அதிகமான தலைவலி, கண்கள் சிவப்பாக உருமாறுதல், கொப்பளங்கள் உருவாதல், உடலில் வீக்கங்களும் தடிப்புகளும் ஏற்படுதல் ஆகியவைதான் அறிகுறிகள். ஆகையால் இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறது கர்நாடகா மாநில சுகாதாரத்துறை.
கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ஜிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications