"ஆசியாவின் கம்பீரம்"! மிக நீளமான தந்தங்களை கொண்ட போகேஷ்வர் யானை மரணம்.. பெரும் சோகம்!
பெங்களூர்: ஆசியாவிலேயே மிகப் பெரிய தந்தங்களைக் கொண்ட யானையாகக் கருதப்படும் போகேஷ்வர் யானை உயிரிழந்துள்ளது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
காட்டில் வாழும் விலங்குகளில் மிக மிக முக்கியமானது யானைகள். காட்டில் சமநிலையைப் பேணுவதில் யானைகளின் பங்கு மிக மிக முக்கியமானது.
இருப்பினும், வழக்கம் போல மனிதர்களின் பேராசை யானைகளையும் விட்டுவைக்கவில்லை. இதனால் கடந்த நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ந்தது.

யானைகள்
வனவிலங்கு ஆர்வலர்களின் பெரும் முயற்சிக்குப் பின்னரே இப்போது யானைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் யானைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது. அதன் பின்னரே யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கின. இந்தியாவில் வழக்கமாக ஆசிய யானைகளே காணப்படும். ஆசியாவிலேயே மிகப் பெரிய தந்தத்தைக் கொண்ட யானையும் கூட நமது நாட்டில் தான் உள்ளது.

போகேஷ்வர்
ஆசிய யானைகளில் மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானையாகக் கருதப்பட்ட இதன் பெயர் போகேஷ்வர். கபினி காயல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது இந்த போகேஷ்வர் யானை. இது நாகராஹோலே மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் இது சுற்றிக் கொண்டு இருக்கும். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த யானை எப்போதுமே கவரும். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட அந்த யானை, இப்போது நம்முடன் இல்லை.

உயிரிழந்தது
60 வயதான போகேஷ்வர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இந்த யானை முக்கியமான ஒன்றாக இருந்தது. பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் குண்ட்ரே ரேஞ்ச் பகுதியில் நேற்று காலை போகேஷ்வர் உயிரிழந்து கிடந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன ஆச்சு
இது குறித்து புலிகள் சரணாலய இயக்குநர் ரமேஷ் குமார் கூறுகையில், "யானையின் உடலில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அது இயற்கையான முறையிலேயே உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், கடந்த வாரம் தான் போகேஷ்வர் யானை மற்றொரு யானை உடன் சண்டையிட்டது. அதன் பிறகு உடல்நிலை மோசமான நிலையில், அது உயிரிழந்தது" என்றார்.

தந்தங்கள்
வனத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் படி யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்காக மைசூரு டிப்போவுக்கு அனுப்பப்பட்டன. யானையின் மற்ற உறுப்புகள் வனத்துறையினரின் மரபுப்படி, இறந்து கிடந்த அதே இடத்தில் கழுகு உட்ப மற்ற வனவிலங்குகளின் விலங்குகளின் உணவுக்காக விடப்பட்டுள்ளன. போகேஷ்வரின் இரு தந்தங்கள் மட்டும் 2.58 மீட்டர் மற்றும் 2.35 மீட்டர் இருந்ததாக வனத்துறை அதிகாரிகளின் தெரிவித்தனர். அதன் தந்தங்கள் மட்டும் தும்பிக்கை அளவுக்கு நீளமாக இருக்கிறது.

பெயர் காரணம்
இந்த யானை போகேஷ்வர் முகாம் அருகே இருக்கும் கோயிலுக்கு அருகே தான் அடிக்கடி சுற்றிக் கொண்டு இருக்கும். இதனால் இந்த யானையை போகேஷ்வர் யானை என்றே வனத்துறை அதிகாரிகள் அழைக்கத் தொடங்கினர். கபினி புலிகள் காப்பகத்தில் புலிகளைப் பார்க்க முடியவில்லை என்றாலும் கூட பல சுற்றுலாப் பயணிகள் இந்த போகேஷ்வர் யானையைப் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். மேலும், இந்த யானை பல வனவிலங்கு ஆவணப்படங்களிலும் இடம்பெற்றுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாதனை
போகேஷ்வரிடம் இதுவரை இல்லாத அளவுக்கு நீளமான தந்தங்கள் உள்ளதா என்பதை அறிந்து சாதனை புத்தகங்களில் இடம் பெறச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக அமைதியான குணம் கொண்ட யானைகள், தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications