கலைகிறதா கர்நாடக கூட்டணி அரசு.. காங்.-மஜத தலைவர்கள் வார்த்தை போர்.. இரு கட்சி தொண்டர்களும் மோதல்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி நடுவே பெரும் விரிசல் உருவாகி உள்ளது.
இக்கூட்டணி அமைந்து ஓராண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான, முன்னாள் முதல்வர் சித்தராமையா மீண்டும் முதல்வராக விரும்புவதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இரு கட்சிகள் நடுவே உரசல் அதிகரித்து உள்ளது.
நீங்கள் மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா? சொல்லுங்கள்.. நிர்மலா சீதாராமன் மாயாவதிக்கு கேள்வி!
சித்தராமையா தொகுதி
சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூர் தொகுதியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தொண்டர்கள், பாஜக வேட்பாளருக்குதான் லோக்சபா தேர்தலின்போது வாக்களித்தார்களே தவிர கூட்டணி கட்சியான, காங்கிரசுக்கு இல்லை என்று மஜத மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான ஜிடி.தேவகவுடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூட்டணிக்குள் கலவரம்
மைசூரில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிடாமல் காங்கிரஸ் சீட் பெற்றது. அதன் காரணமாக அக்கட்சியினர் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டனர் என்பதுதான் ஜிடி. தேவகவுடாவின் பேட்டி சொல்ல வந்த செய்தி. இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் விஸ்வநாத் அளித்துள்ள பேட்டியும் எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது.
சித்தராமையா மீது பாய்ச்சல்
விஸ்வநாத் கூறியதை பாருங்கள்: சித்தராமையா மீண்டும் முதல்வராக விரும்புகிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு வரை அது நடக்காது. சித்தராமையாவின் ஆட்சி காலத்தில் நினைவில் கொள்ளத்தக்க ஏதாவது ஒரு பெரிய திட்டம் இருந்ததா? அது சிறப்பு மிக்க ஆட்சி கிடையாது. சித்தராமையாதான் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக உள்ளார். தான் முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்தை அந்தக் கூட்டத்திலேயே சொல்லலாமே.. யார் தடுத்தது ,என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஸ்வநாத்.
கூட்டணி தர்மம்
இதற்கு சித்தராமையா ட்விட்டரில் அளித்துள்ள பதிலில், இந்த விவகாரங்களை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தான் எழுப்ப உள்ளதாகவும், ஏற்கனவே ஜிடி தேவகவுடா இதுபோல சர்ச்சை கருத்தை கூறி விட்டார். இப்போது விஸ்வநாத் தெரிவித்துள்ளார். இன்னும் அடுத்து யாரெல்லாம் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டணி தர்மம் என்ற ஒன்றுக்காகத்தான், தான் அமைதியாக இருப்பதாக சித்தராமையா தெரிவித்தார்.
எடியூரப்பா அதிரடி
இவ்வாறு இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் மோதிக் கொண்டுள்ள நிலையில், நடுவே புகுந்து கூட்டணிக்குள் இன்னும் விரிசலை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறது பாஜக. அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறுகையில், விஸ்வநாத் கூறியுள்ள கருத்து என்பது அவருடைய சொந்த கருத்தை மட்டும் கிடையாது. முதல்வர் குமாரசாமி சொல்ல விரும்பிய கருத்தை தான், அவர் சித்தராமையாவுக்கு தெரிவித்துவிட்டார். கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையும் என்பதற்கு இது ஒரு உதாரணம், என்று தெரிவித்தார்.
தொண்டர்கள் மோதல்
இதனிடையே கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் நடுவே இன்று மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். கூட்டணி கட்சிகள் நடுவே அமைந்த பெரும் மோதல் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.