சங்கராந்திக்கு பின் ஆட்சி மாறும்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்.. ஆபரேஷன் கமலா என்றால் என்ன?
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேர் மும்பையில் தங்கி இருப்பதாக செய்திகள் வருகிறது. இவர்கள், பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் கமலா என்றால் என்ன, பாஜகவின் திட்டங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் கொண்டாடப்படும் சங்கராந்திக்கு பின் இதே கூட்டணி ஆட்சியில் இருக்காது, பாஜக ஆட்சி அமையும் என்றும் கூறுகிறார்கள்.
தற்போதைய நிலை என்ன?
கர்நாடக சட்டசபையின் பலம் 224. தற்போது ஆட்சி செய்து வரும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளம் 37 எம்எல்ஏக்கள் பலம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ, கர்நாடகா பிரக்ன்யாவந்தா ஜனதா கட்சிக்கு 1 எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ 1 என்று 120 பேர் இருக்கிறார்கள்.
பெரும்பான்மை பலம் என்ன
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பெற 113 பேரின் ஆதரவு தேவை. கர்நாடக சட்டசபையில் பாஜகவின் பலம் 104 ஆகும். தற்போது பாஜக பெரும்பான்மை பெற வேண்டும் என்றால், அந்த கட்சிக்கு 9 பேர் ஆதரவு அளிக்க வேண்டும். ஒருவேளை பகுஜன் சமாஜ், கர்நாடகா பிரக்ன்யாவந்தா ஜனதா கட்சி, சுயேச்சை ஆதரவு அளித்தால் கூட மேலும் 6 எம்எல்ஏக்கள் கூடுதலாக பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.
நீக்குவார்கள்
அதே சமயம் 6 எம்எல்ஏக்களை காங்கிரஸ், மஜத என்று எந்த கட்சியில் இருந்தும் பாஜக வாங்கி ஆட்சியை கவிழ்க்க முடியாது. உதாரணமாக இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக 6 எம்எல்ஏக்களை வாங்கி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக இந்த எம்எல்ஏக்கள் நீக்கப்படுவார்கள். கட்சி தாவல் தடை சட்டத்தின்படி இவர்களின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்.
என்ன பிளான்
இதற்காகத்தான் பாஜக ஆபரேஷன் கமலாவை உருவாக்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இந்த திட்டத்தின்படி 16 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக பதவி விலக சொல்லப்போவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரும் ஒரேயடியாக எம்எல்ஏ பதவியை விலகினால் அவையின் பலம் 208 ஆக குறையும். அப்படி குறையும்பட்சத்தில் பெரும்பான்மை நிரூபிக்க தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை 104 ஆக மாறும்.
ஆட்சி அமைக்கலாம்
இதனால், 104 உறுப்பினர்களை கொண்டு இருக்கும் பாஜக தானாக ஆட்சி அமைக்க முடியும். இந்த பதவி விலகிய எம்எல்ஏக்களுக்கான இடைத்தேர்தல் பெரும்பாலும் லோக் சபா தேர்தலுடன்தான் நடக்கும் என்பதால், லோக் சபா தேர்தல் சமயத்தில் பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருக்க முடியும். இதனால்தான் தற்போது பாஜக ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.