இந்து பெண்ணுடன் என்ன பேச்சு? இஸ்லாமியர் மீது சரமாரி தாக்குதல்! கர்நாடகாவில் பஜ்ரங்தள் அட்டகாசம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பேருந்தில் இந்து பெண்ணிடம் பேசியதற்காக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தட்சின் கன்னடா மாவட்டத்தின் மூடிபித்ரே பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பலர் இறங்கி இருக்கின்றனர்.
அப்போது இந்து மதத்தை சேர்ந்த ஒரு பெண் தனது பேகை 45 வயதான இஷாக் எனும் நபரிடம் கொடுத்து கீழிறக்கி வைக்க சொல்லியுள்ளார்.

தாக்குதல்
இதனை கவனித்த பேருந்து நடத்துனர், "இந்து பெண்ணிடம் உனக்கென்ன பேச்சு" என்று கேட்டிருக்கிறார். அப்பெண்மணி தனது பேகை கீழிறக்கி வைக்க உதவியதாகவும் வேறு எதையும் பேசவில்லை என்றும் இஷாக் கூறியுள்ளார். ஆனால் இதை காதில் போட்டுக்கொள்ளாத அவர் அருகில் இருந்த பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்களிடத்தில் இது குறித்து கூறியுள்ளார். உடனே அவர்கள் இஷாக்கை தனியாக அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்மணி கேட்ட கேள்விக்கு பேருந்து நடத்துனரும், பஜ்ரங்தள் அமைப்பினரும் முறையான பதிலை கொடுக்கவில்லை. இதனையடுத்து இஷாக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

வழக்குப்பதிவு
சம்பவம் குறித்து காவல் நிலையில்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது, "சம்பந்தபட்ட பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக பேருந்து நடத்துனர் கூறியிருக்கிறார். எனவேதான் இஷாக் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. எப்படியாயினும் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இஸ்லாமிய இளைஞருடன் பயணம்
அதே போல நேற்று முன்தினம் மங்களூரு பகுதியில் இஸ்லாமிய இளைஞருடன் பயணித்த இந்து இளம்பெண்ணை பஜ்ரங்தள் அமைப்பினர் தடுத்து நிறுத்தி கேள்வியெழுப்பியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த இவர்களை கல்லட்கா தசகோடி எனும் இடத்தில் பஜ்ரங்தள் அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இஸ்லாமிய இளைஞரை தாக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அப்பெண் பஜ்ரங்தள் அமைப்பினரை எதிர்த்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு இஸ்லாமிய இளைஞருடன் எப்படி பயணிக்கலாம் என்று பஜ்ரங்தள் அமைப்பினர் அந்த இளம்பெண்ணை கடுமையாக திட்டுயுள்ளனர்.

குற்றச்சாட்டு
இதனையடுத்து சக பயணிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. பின்னர் சமாதானம் பேசி அங்கிருந்து அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இது போன்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 6 நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் இந்த சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications