ஐடி ஊழியரையடுத்து மற்றொரு மனைவி கொடுமை சம்பவம்.. லெட்டர் எழுதிவிட்டு ரயிலில் பாய்ந்த போலீஸ்காரர்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 33 வயதான தலைமைக் காவலர் திப்பண்ணா அலுகூர் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மனைவியும் மாமனாரும் தன்னை துன்புறுத்துவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் வசித்து வந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

மீண்டும் ஷாக்: பிரிந்து வாழும் மனைவி விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் என்ற பெயரில் தன்னை சித்திரவதை செய்வதாக சொல்லி தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மீண்டும் அதுபோல ஒரு மோசமான சம்பவம் அதே பெங்களூரில் நடந்துள்ளது. மனைவியும் மாமனாரும் தன்னை துன்புறுத்துவதாகச் சொல்லிவிட்டு, தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தலைமைக் காவலராக இருப்பவர் திப்பண்ணா அலுகூர். 33 வயதான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹீலாலிகே என்ற பகுதியில் இருந்து கார்மெலாரம் என்ற பகுதிக்குச் சென்று கொண்டு இருந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த சிலர் இரவு 8 மணியளவில் அவரது உடலை முதலில் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது: தற்கொலை செய்து கொண்ட திப்பண்ணா விஜயபுரா மாவட்டம் ஹண்டிகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.. ஹுளிமாவு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய இவருக்குக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதி பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். சம்பவம் நடந்த நாளன்று திப்பண்ணாவுக்கும் அவரது மனைவிக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பார்வதியின் தந்தை யமுனப்பாவும் திப்பண்ணாவுக்கு போன் செய்து மோசமாகத் திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்தே திப்பண்ணா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு லெட்டரையும் எழுதியுள்ளார். அதில் தனது மனைவியும் மாமனாரும் தன்னை மிகவும் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டல்: குறிப்பாக கடந்த டிசம்பர் 12ம் தேதி யமுனப்பா தன்னை கால் செய்து மிரட்டியதாகவும் அந்த லெட்டரில் கூறியிருக்கிறார். மேலும், தனது மாமனார் செத்து போ என்று சொல்லி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், "இதற்கு இரண்டே முடிவு தான் இருக்கிறது ஒன்று நான் உயிரிழக்க வேண்டும்.. இல்லையென்றால் என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்" என்பதோடு அந்த கடிதம் முடிந்தது.
அரசு தனக்கு அளித்த சீட்டா பைக் ஹுஸ்கூர் ரயில் தண்டவாளத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் உடன் வேலை செய்யும் மலப்பாவிடம் அந்த பைக்கை எடுத்துக் கொள்ளுமாறு அதில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது போலீஸ் யூனிபார்மை அணிந்தவாறே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீசில் புகார்: இந்தச் சம்பவம் தொடர்பாக திப்பண்ணாவின் தாய் பாசம்மா அலுகூர், பையப்பனஹள்ளி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பார்வதியும் யமுனப்பாவும் தனது மகனைச் சித்திரவதை செய்ததாகவும் அதுவே இதன் காரணமாகவே தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அடுத்த கட்டமாகப் பார்வதி மற்றும் யமுன்னப்பாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications